கோவை: போலி இ பாஸ் ( Epass ) மூலம் பல மாநிலங்களில் கடந்த ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை சாவடி அமைத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் இருந்து ஆம்னி பஸ் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 30 பேரிடம் இருந்த இ-பாஸை வாங்கி சோதனை செய்தனர். அதில், அனைத்தும் போலி என தெரிந்தது.
இதனையடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர்.மேலும் போலி இ-பாஸ் மூலம் பல மாநிலங்களை கடந்து எப்படி அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.