கொடிய வைரஸான கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற தூய்மைப் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் கால்நடைகள் போல் மினிடோர் வண்டியில் கூட்டமாக அடைத்து கொண்டு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது.

144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கிருமி நாசினி தெளிப்பதற்காகவும் குப்பைகளை அகற்றுவதற்காகவும் துப்புரவு பணியாளர்களின் சேவை நம் நாட்டிற்கு அன்றாட தேவையாக உள்ளது.
நாட்டுக்காக கடமையாற்றும் துப்புரவு பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழியாக சுய தனிமைப்படுத்துதலை (Self-Distancing) உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
சுய தனிமைப்படுத்துதல் என்ற கோட்பாட்டை மறந்து கால்நடைகள் போல துப்புரவு பணியாளர்களை அடைத்து ஏற்றி வருவது, அரசு அதிகாரிகளிடமே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.

அதேபோல் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் பணி செய்யும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு முக கவசமும், உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட கவச உடைகளும் சரியாக வழங்கப்படவில்லை என்றும், துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசமும், கையுறையும்
சரியாக வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுகின்றது.
அரசு ஊழியர்களான காவல்துறையினர், மருத்துவர்கள் & செவிலியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் பலர் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நம் நாட்டிற்காக கடமையாற்றும் இவர்களுக்கு கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும்.