அரசியல் செய்திகள் தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார். 

அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தேர்தல் அறிக்கையை  வெளியிடும் முன்பு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துள்ளது. திமுக சார்பாக வெளியிடும் தேர்தல் அறிக்கை நடுநிலை ஆட்சி அமைக்கும் என்பதை உறுதி அளிக்கிறோம். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தல் களத்தின் கதாநாயகனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை

1.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

2.  மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

3. தனிநபர் வருமானம் ரூ. 86,689 இருந்து 1,50, 000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

4. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

5. மத்திய அரசின் மொத்தவரியில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கீடு செய்யப்படும்.

6. மத்திய நிதி குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்படும்.

7. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயக்கப்படும்.

8. பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துப்போன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லூநர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்.

9.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

10. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

11. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்.

12. சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சமாக 28 சதவிகிதம் வரை இருப்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.

13. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

14. பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேர் சாலைப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.

15. சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

16. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

17. முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்.

18. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படும்.

19. 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

20. மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

21. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

22. 10-ம் வகுப்பு வரை படித்த 50,000  கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக பணி அமர்த்தப்படுவார்கள்.

23. 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பிய அகதிகள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.

24. கிராமபுறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

25. உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.

26. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.

27. சென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

28. கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் 0.5 விழுக்காடு நிதி ஒதுக்கப்படும். மேலும் புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

29. கடலோர சமுதாய மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

30. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

31. சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களை அனுப்புபவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.

32. காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும்.

33. நீர்வளத்தையும் நிலத்தையும் பாதிக்கும் மீத்தேன் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

34. விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.

35. வேலையிலாத் திண்டாட்டத்தைப் போக்க, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

36. கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

37. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

38.  அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்.

39. பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

40. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

41. ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.

42. தற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலூமாக வருமான வரியில் இருந்து விலக்களிக்கப்படும்.

43. தனியார் நிறுவனக்களில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.



Leave a Comment